Friday, November 12, 2010

ஐயகோ!!!




கருணாநிதியின்
கண்ணாடி பிளக்கப்பட்டு..
ஜெயலலிதாவின்
மூக்கு உடைக்கப்பட்டு..
ராஜபக்ஷேவின்
உடல் துண்டாக்கப்பட்டு..
சோனியா காந்தியின்
கைகள் வெட்டப்பட்டு..
மன்மோகன் சிங்கின்
தலைப்பாய் உருவப்பட்டு..
அத்வானியின்
ஆடை கசக்கப்பட்டு..
ரஜினியின்
முழங்கால் மடிக்கப்பட்டு..
ஸ்னேகாவின்
உதடு கிழிக்கப்பட்டு..
இன்னும் இன்னும்
பல பிரபலங்கள்...

மளிகை சாமான் கடையின்

பொட்டலங்களில்!!!

--நிலாப்பெண்..

Wednesday, September 1, 2010

வாழ்க்கையுடன் போராடு..


உன் சுயமரியாதைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டால்,
வலியென வீழ்ந்துவிடாதே!
விழித்துக் கொண்டுப் போராடத் தொடங்கு....

தனிமை சிறையில் அகப்பட்டு கொண்டால்
இருட்டுக்குள் அடங்கிவிடாதே!
பிறர் வாழ்க்கைக்கு ஒளியேற்ற ஓடு...

வாழ்க்கை பாதையில் தடங்கல்கள் தடுத்தால்
தடுமாறி தளராதே!
விண்ணை தொடுவது போல் எகிறி தாண்டு..

தினம்தினம் உன் மேல் விழும் அடிகளால்
அடங்கி விடாதே!
நீ ஒவ்வொரு அடியாக முன்னேறுவதாய் நம்பு..

விதியென மூலையில் மூளையில்லாது
மழுங்கி விடாதே!
மதிக் கொண்டு வெல்வதை உலகிற்கு இயம்பு..

கூனிக் குறுகி கேள்விக்குறியாய் வாழ்ந்து
மாய்ந்து விடாதே!
நிமிர்ந்து நின்று ஆச்சரியக் குறியாக உயர்..

--நிலாப்பெண்..

Monday, August 30, 2010

வீரா!

வளைந்து குறுகினாலும்,
வீரத்தின் அடையாளம்.
உன் முறுக்கு மீசை!

மென்மை!

இருப்பக்க அரிவாள்
மென்மையாய் தீண்டுதே,
மீசைக்காரா!

--நிலாப்பெண் ..

வண்ணங்கள் விற்பனைக்கு..


நீலமும் சிவப்பும் ஒன்றாக,
வானமும் வட்டனும் அல்ல..
கருப்பும் வெள்ளையும் கட்டிக்கொண்டு,
ரஜினியும் ஸ்ரேயாவும் அல்ல..
மஞ்சளும் பச்சையும் பக்கத்திலேயே,
கட்சிக் கூட்டமும் அல்ல..
காவியும் சாம்பலும் பக்கத்திலேயே,
காஞ்சிபுர மடமும் அல்ல..


விதவை விற்கும் பாசிமணிகள்..
வெறும் பத்து ரூபாய்!

--நிலாப்பெண்..
==>வட்டன் -- சூரியனுக்கு நான் சூட்டிய செல்ல பெயர்..

கனவுக்குள்ளே..


நேற்று நீ கனவில்
வருவதாய் சொன்னாய்..
நானும் கண்விழித்து
காத்திருந்தேன்..
உன் நினைவுகளின்
ஊடே கனவுக்குள்ளும்
கள்ளத்தனமாய்
எப்படி புகுவாயென?
ஆனாலும் வந்து தான்
விட்டாய்..
தற்செயலாய்
கண் சிமிட்டுகையில்,
தொட்டில் கட்டி,
எனை தாலாட்ட...


--நிலாப்பெண்..

தூக்கமின்மை..

ஏனோ என் இரவுகள்,
இப்பொழுதெல்லாம்
முடிவதே இல்லை..
பொழுது புலர்ந்த பின்னும்
பெரிதாய் மாற்றம்
உணர்வதில்லை..
இயற்கை வரைந்து விட்ட
கண் மையாய்,
கருவளையம்
கவிழ்ந்து நிற்க...
கனவுகளின் ஊடே
வரும் தூக்கத்தை
துரத்திக் கொண்டு நான்..

காரணம்?
கரண்ட் இல்லா
கோடைக் காலம் மட்டுமல்ல,
தற்போது தேர்வுக்காலம் கூட

--நிலாப்பெண்..

காதலினால்..


உன் பெயரின் அர்த்தம் கேட்டேன்,
தெரியாது "புவி' என்றாய்..
என் பெயர் அர்த்தம் பெற்றது!!!

--நிலாப்பெண்@ புவி:)

அழகான வார்த்தைகள்..


உன்னை பற்றி
கவிதை எழுதுகையில்,
நான் திரும்ப திரும்ப
திருத்துவதே இல்லை..
வார்த்தைகள் எல்லாம்
இடம் தேடி அமர்கிறது
உன்னை பற்றிய
கவிதை என்றதும்!

--நிலாப்பெண்..

வாழ்கையாம் வாழ்க்கை!!!


வேதனை தலைத்தூக்கும் நேரம்,
தலைக்குனியும் தன்னம்பிக்கை..

சுடும் வார்த்தைகளின் முன்,
சுடுகாட்டில் சுயமரியாதை..

கண்ணீரின் வரவறிந்து,
சென்றுவிடும் சிரிப்பலை..

மரியாதை மிதிப்படுகையில்,
மறைந்துவிடும் மனிதநேயம்..

இழப்புகள் இறுதிவரை தொடர,
வரவுகள் மட்டும் வக்கனாய்..

வாழ்க்கையாம் வாழ்க்கை!
மனிதராம் மனிதர்!!

--நிலாப்பெண்..

மழைக் காதல்..


நீ குடை விரிப்பதற்குள்
உன்னை தொட்டு விட்ட
மழைத்துளிகளை பார்த்து,
இன்னும் கறுத்தது வானம்,
என் முகமும் தான்...

--நிலாப்பெண்

Thursday, August 26, 2010

உணர்வின் உணர்வு!


மரணித்த பின்பு
தானே புதைப்பார்கள்,
நானோ புதைக்கிறேன்
உயிர்பெறும் உணர்வுகளை!

அடக்காத உணர்வுகள்
உயிரை குடிக்காது,
குதறி விளையாடும்
உயிரின் வேரினை!

காயத்தின் ரத்தம்
உறைந்து போகும்,
படிந்து விடுமே
பலமாக வடுக்கள்!

பத்திரமாய் புதைக்கிறேன்
உணர்வுகளை ஆழத்தில்,
ஒடுக்கப்பட்ட உணர்வுகள்
ஒய்யாரமாய் கர்ஜிக்கிறது!

ஒடுக்கப்படலாம்,
ஒழிக்க முடியுமா என?

--நிலாப்பெண்..

கவிதையின் கதை..


நீ உயிருக்குள்
ஊடுருவியதால்,
உயிர் பெற்ற எழுத்துக்கள்
பிணைந்து நின்று,
கவிதைகளாக
வெறியாட்டம் போட்டன..

நீ பார்க்கும் வேளைகளில்,
பல்லிளித்து நின்றன..

நீ பேசிய ஒருசில
வார்த்தைகளை கேட்டு,
கோடி வார்த்தைகள்
முட்டிக் கொண்டன,
உன்பற்றிய கவிதைகளுக்குள்
எப்படியேனும் நுழைந்துவிட..

அழகான கவிதைகளென,
புன்னகைப் பூத்தாய்..
ஆரவாரமிட்டு கூச்சலிட்டன
உன்னால் பிறந்த,
கவிக் குழந்தைகள்..

மெள்ள நீ விலகிசெல்கையில்
வீரிட்டு அழுதன கைக்குழந்தையாய்..

முற்றிலுமாக விட்டுச்சென்றாய்,
மரணப்படுக்கையில்
மெளனித்தன கவிதைகள்!

--நிலாப்பெண்..

Thursday, March 11, 2010

நாணயத்திற்கு மட்டும் நாணயமானவர்..


செல்லும் பாதையில்,
நாணயம் ஜொலிஜொலிக்க..
கண்டும் காணாமல் நான்!
என் "நாணயதைக்" காப்பாற்றி..

அதே பாதையில்
கத்தையாய் நோட்டு,
சில்லறையாகிப் போனது
என் "நாணயம்"!!!

--நிலாப்பெண்..

அமாவாசை அறியாச் சிறுமி..


அமாவாசை அறியாச் சிறுமி..
நிலவுத் தொலைந்துவிட்டதா?
எப்படி தொலைந்திருக்கும்?
நேற்றுக் கூட பார்த்தேனே?
நல்லாத் தானே இருந்தது?
யாருடனாவது சண்டையோ?
தனிக்கட்டை யாரோடு சண்டையிடும்?
நட்சத்திரங்கள் வம்பிழுத்திருக்குமோ?
நாலாப்பக்கத்திலும் இல்லையே?
கீழக் குதித்துத் தற்கொலை பண்ணியிருக்குமோ?
நாளிதழில் செய்தி வருமோ?
நிலவுக்கு என்னாச்சோ?
யாருமே கவலைப்படலையே?
அம்மா அடுப்படிக்குள்ளேயே?
அப்பா அலுவலகத்திலேயே?
நிலவு கண்ணாமூச்சி காட்டுதோ?
நாளைக்கு வந்திருமோ?
காத்திருக்கிறேன்..

--நிலாப்பெண்..

இடமாற்றம்..


பசி வயிற்றை கிள்ளவில்லை,
பேருந்தில் இடையைக் கிள்ளியது..

கொடூரனின் காமப்பசி!

--நிலாப்பெண்..

போனப் பின் ஏது?


அவன் பையில் ஒரு ரூபாய்!
எல்லோருக்கும், அவன் செல்லாக் காசு..

பிணத்தின் நெற்றியில் ஒரு ரூபாய்,
அத்தோடு, செல்லும் காசு..


--நிலாப்பெண்..

நிறைவு..


என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....

--நிலாப்பெண்..

நான் யாரெனில்?


தினம் தினம் அவமானப்படுவேன்.
சுற்றத்தார் சுமத்தும் பழிகளை,
சுமைத் தாங்கியாய் சுமப்பேன்.
கணவன் கள்ளத்தொடர்பைக் கூட,
கண்ணியமாய் ஆதரிப்பேன்.
மாமியார் கொடுமைகளை
கண்ணீருடன் பெறுவேன்.
நாத்தனாரின் நடத்தையைக் கண்டு
உள்ளம் பொங்கி அழுவேன்.
குழந்தைகளுக்காகவே குமுறலுடன்
காலம் கழிப்பேன்.
ஒருநாள் வேறு வழியின்றி,
பொங்கி எழுவேன்.
வீட்டை விட்டு வெளியேறி,
கைநிறைய காசு பார்ப்பேன்.
கார், பங்களா எல்லாம்
கலர் கலராய் சொந்தமாக்குவேன்.
கணவனே வந்து காலடியில்
விழும்படி செய்வேன்.
நான் யாரெனில்,
பெண்களே கொஞ்சம் கண்ணீரை
துடைத்து விட்டு பாருங்கள்..
நானே,

"உம் சீரியல் நாயகி"!!!!!!!!!!!!

--BY சீரியல் பார்காத ""நிலாப்பெண்..."